சென்னையில் புயல் எச்சரிக்கைக் கூண்டு : மீனவர்கள் 2-வது நாளாக கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லவில்லை

   மிழகம் மற்றும் புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டி வருகிறது. சென்னையில் கடற்சீற்றமாக இருப்பதால் மீனவர்கள் 2-வது நாளாக இன்றும் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லவில்லை.
சென்னை, கடலூர், நாகை ஆகிய துறைமுகங்களில் ஒண்றாம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. பாம்பன், தூத்துக்குடி, புதுச்சேரி துறைமுகங்களிலும் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை வட இலங்கை மற்றும் தமிழக கடலோரப் பகுதியை நோக்கி நகர்ந்து வருவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கனமழையைத் தொடர்ந்து, காரைக்கால்,  கடலூர், திருவாரூர் மற்றும் நாகை மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது. புதுச்சேரியிலும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
கடந்த 25 ஆம் தேதி அந்தமான் நீக்கோபார் தீவுகளுக்கு அருகே உருவான காற்றழுத்த தாழ்வு நிலை, தற்போது வடக்கு நோக்கி நகர்ந்து தீவிர காற்றழுத்த பகுதியாக மாறியுள்ளது. இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறவும் வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால், தமிழகம் மற்றும் புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.