உத்தரகண்ட் மாநில அரசு வரும் ஜனவரி 1-ம் தேதி முதல் புகையிலைப் பொருள்களுக்குத் தடை விதிக்க திட்டமிட்டிருக்கிறது.
புகையிலைப் பழக்கத்தால் ஏற்படும் வாய்ப் புற்றுநோயால் இந்தியாவில்
ஆண்டுதோறும் 80 ஆயிரம் பேர் பாதிக்கப்படுவதாக உலக சுகாதார நிறுவனம்
தெரிவித்துள்ளது. இதனையடுத்து உத்தரகண்ட் மாநில அரசு வரும் புகையிலைப்
பொருள்களுக்குத் தடை விதிக்க திட்டமிட்டிருப்பதாக மாநில தலைமைச் செயலர்
அலோக் ஜெயின் தெரிவித்தார். இருப்பு வைத்திருக்கும் புகையிலைப் பொருள்களை
அதற்குள்ளாக விற்றுவிடுமாறு வணிகர்களை அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
மெல்லும் வகையிலான “குட்கா” போன்ற புகையிலைப் பொருள்களுக்கு இதுவரை 10
மாநிலங்கள் தடை விதித்துள்ளன. எனினும் நாடு முழுவதும் 6. 5 கோடி பேர்
இன்னும் குட்கா பழக்கத்துக்கு அடிமையாகி இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
குட்காவுக்கு தடை விதிப்பதால், சிறு வணிகர்கள், விவசாயிகள், தொழிலாளர்கள்
போன்றோர் பாதிக்கப்படுவதாக வழக்குகள் தொடுக்கப்படுவதால், புகையிலைப்
பொருள்களுக்குத் தடை விதிப்பதில் சிக்கல் நீடித்து வருகிறது.