சென்னை மடிப்பாக்கத்தில் நகைக்கடை ஊழியரை கொன்று, 1 கிலோ நகைகளை மர்ம
நபர்கள் கொள்ளையடிக்கப்பட்டதைக் கண்டித்து சென்னையில் நகை அடகுக் கடை
உரிமையாளர்கள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சென்னை மடிப்பாக்கம் சதாசிவம் நகரில் உள்ளது பாலாஜி ஜூவல்லர்ஸ். அந்த
நகைக் கடையில், நேற்று புகுந்த மர்ம நபர்கள் அங்கு வேலை பார்த்து வந்த
ஊழியர் மதன் சிங்கின் கழுத்தை அறுத்து படுகொலை செய்துள்ளனர். பின்னர்,
அங்கிருந்த சுமார் ஒரு கிலோ நகைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். மேலும்,
அடையாளம் தெரியாமல் இருப்பதற்காக கடையில் இருந்த கண்காணிப்பு காமிராவையும்
அடித்து நொறுக்கியுள்ளனர்.
இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள காவல்துறையினர், கொள்ளையர்களைத்
தேடி வருகின்றனர். இதனிடையே கொள்ளையர்களை உடனடியாக கைது செய்யக் கோரி
சென்னை நகை அடகுக் கடை உரிமையாளர்கள் இன்று கடையடைப்பு போராட்டத்தில்
ஈடுபட்டுள்ளனர். கொள்ளையர்கள் கைது செய்யப்படாவிட்டால் நாளையும் போராட்டம்
தொடரும் என அவர்கள் எச்சரித்துள்ளனர்.