பூமியை நெருங்கும் விண்கல்



           பிப்ரவரி 15 ஆம் தேதி விண்கல் ஒன்று பூமிக்கு மிக அருகில் வரவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.இந்நிகழ்வைக் கண்காணிக்க, சர்வதேச விஞ்ஞானிகள் தயார் நிலையில் உள்ளனர்.
2012 டிசம்பர் 21-ஆம் தேதி நிபுரு என்ற கற்பனையான கோள், பூமியின் மீது மோதப்போவதாக வெளியான இணையதள தகவல்கள் அறிவியல் உலகின் கவனத்தை ஈர்த்தது. ஆனால் அந்தத் தகவல் பொய்யானது என்று நிரூபணமாகி சில நாட்களே ஆன நிலையில் மற்றொரு அதிர்ச்சியான தகவலை ஸ்பெயின் நாட்டு விண்வெளி விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ளனர்.
வரும் பிப்ரவரி 15-ஆம் தேதி 2012 DA 14 என்று பெயரிடப்பட்டுள்ள விண்கல் பூமிக்கு மிக அருகில் கடந்து செல்ல இருப்பதாக அவர்கள் கூறியுள்ளனர். கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் கண்டுபிடிக்கப்பட்ட இந்த விண்கல் பூமியைப் போலவே 366.2 நாட்களுக்கு ஒரு முறை சூரியனை சுற்றி வருகிறது.
கடந்த பிப்ரவரி 23 ஆம் தேதி 2 கோடியே 60 இலட்சம் கிலோ மீட்டர் தொலைவில் பூமியைக் கடந்து சென்ற இந்த விண்கல், இந்த முறை வெறும் 35 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் கடந்து செல்ல இருக்கிறது.
இது நமது புவிநிலைத் தொடர்பு செயற்கைக்கோள்கள் நிலை நிறுத்தப்படும் பாதையில் குறுக்கிடுவதால் செயற்கைக்கோள்களுக்கு பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளதாகவும் விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்
.

 -பசுமை நாயகன்