நிலத்தடி நீர் வளத்திற்கும் பல்லுயிர் பொருக்கத்திற்கும் ஆதாரமாக உள்ள சதுப்பு நிலங்களும், கடல் சீற்றங்களில் இருந்து நம்மை பாதுகாக்கும் அலையாத்திக் காடுகளும் அழிவை நோக்கிச் சென்று கொண்டுள்ளன.
சதுப்பு நிலம் என்பது அதிக ஆழம் இல்லாத பரந்து விரிந்து காணப்படும் நீர்நிலை பகுதியாகும். பெரும்பாலும் கடலோரப் பகுதிகளில் அமைந்திருக்கும் சதுப்பு நிலங்கள் நிலத்தடி நீர் வளத்திற்கு ஆதாரமாக இருக்கின்றன. மழைக்காலங்களில் அதிக அளவில் நீரை தக்கவைத்துக்கொண்டு, வெள்ளபாதிப்புகளை தடுப்பது இதன் முக்கிய பயனாகும்.
தமிழகத்தில் கோடியக்கரை, பழவேற்காடு மற்றும் பள்ளிக்கரணை ஆகிய இடங்களில் உள்ள சதுப்பு நிலங்கள் ஏராளமான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பறவைகளின் புகலிடமாகவும் திகழ்கின்றன. உப்புநீர் நிறைந்த சதுப்பு நிலத்தில் மங்ரோவ் மரங்கள் அதிகம் வளர்ந்திருக்கும்.
அலையாத்திக் காடுகள் கடலுக்கும் நிலப்பகுதிக்கும் இடையே இயற்கை அமைத்த தடுப்பு சுவராக அமைந்துள்ளன. புயல் காலங்களில் கடல் சீற்றத்தால் எழும் பேரலைகள் நிலப்பகுதியை தாக்காமல் தடுப்பதில் அலையாத்திக் காடுகள் முக்கியப் பங்காற்றுகின்றன. தமிழகத்தின் பிச்சாவரத்தில் உள்ள அலையாத்தி காடு உலக அளவில் இரண்டாவது பெரிய அலையாத்தி காடாகும்.
வீட்டு மனைகளுக்காக நிலங்கள் ஆக்கிரமிக்கப்படுவதாலும், கடலோரங்களில் உள்ள தொழிற்சாலைகள் வெளியேற்றும் வேதியக் கழிவுகளாலும், இன்ன பிற சுற்றுச்சூழல் மாசுபாடுகளாலும் அலையாத்திக் காடுகள் அழிவை சந்தித்து வருவதாக இயற்கை ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
சுனாமி போன்ற பேரழிவுகளை தடுப்பதில் அரணாக அமைந்திருக்கும் அலையாத்திக் காடுகளையும், நிலத்தடி நீர்வளத்திற்கு ஆதாரமாக திகழும் சதுப்பு நிலங்களையும் பாதுகாக்க அரசு தீவிர நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதே அவர்களின் பிரதானக் கோரிக்கையாக உள்ளது. -P.V.உமாதேவி